வியாழன், 22 ஏப்ரல், 2010

நெல்லிக்காய்- Gooseberry


ஆம்லா, அமலாகி என வடமொழியில் அழைக்கப்படும் நெல்லிக்காய் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கனிகளுக்காக வளர்க்கப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும்.

நெல்லி கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைகள் கொத்து, கொத்தாக அடர்த்தியாக வளரும். ஒவ்வொரு காம்பிலும் இருபுறங்களிலும் பச்சை வண்ணத்தில் இலைகள் அமைந்திருக்கும். இலைக் காம்பை ஒட்டியே சின்னஞ்சிறு வெள்ளை நிறப்பூக்கள் அரும்பும். வேனில் காலத் துவக்கத்தில் பூ ஆரம்பித்து வேனில் காலம் முடிவதற்குள் கனிவிடத் தொடங்கி விடுகிறது.

பழத்தில் உள்ள விதைகள் சத்திற்கு நீரிழிவை நீக்கும் இயல்பு உண்டு.

நெல்லியில் உடலுக்கு அவசியமான பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் முதலியவை அதிக அளவில் உள்ளதால் உடலுக்கு வலிமை கிடைக்கின்றது. நெல்லிக்காய் சாற்றில் அதிக அளவு அயர்ன் உள்ளதால் முடிச்சாயத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் நிறம் கறுப்புக் கலந்த பழுப்பு நிறம்.

புதிய மற்றும் உலர்ந்த பழங்களிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் புகழ்பெற்ற ‘திரிபலா’ என்னும் மும்மருந்து அடங்கிய கூட்டுப் பொருள் தயாரிப்பில் இதன் பங்கு முதன்மையானது. புதிய பழங்கள் குளிர்ச்சியையும், இரத்த விருத்தியையும் கொடுக்க கூடியவை.

உயிர்ச்சத்தான வைட்டமின் ‘சி’ சத்து இதில் நிறைந்துள்ளதால் இந்திய மருத்துவத்தில் உபயேரிக்கப்படுகின்றன. இலைகள், பட்டை, வேர், மலர்கள் மற்றும் அனைத்தும் மருத்துவ பயனுள்ள பகுதியாகும்.

இலைகளின் சாறு நாட்பட்ட புண்களுக்கு பூசப்படுகிறது. வடிசாறு வெங்காயத்துடன் கலந்து வயிற்றுப் போக்கினைத் தீர்க்கும். பட்டையும், வேரும் சதை இறுக்கும் தன்மை கொண்டவை. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. பழங்கள் அதிகமாக மசி தயாரிக்கவும் தலை கழுவி நீர்மம் தயாரிக்கவும், பட்டைகளுடன் சேர்ந்து சாயங்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.

சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.

வாழ்நாளை நீடிக்கச் செய்யும் காயகல்ப மூலிகையாகும். நடுத்தர ஆரஞ்சுப் பழம் ஒன்றில் இருப்பதைப் போல இருபது மடங்கு வைட்டமின் ‘சி’ சத்து இதில் அடங்கியிருக்கிறது. காய்கள் காய்ந்தாலும், கொதிக்க வைத்தாலும் இச்சத்து அழிவதில்லை. “ஸ்கர்வி” என்ற தோல் நோய் இச்சத்து குறைவினால் தான் ஏற்படுகிறது. இச்சத்துக் குறைவை இக்கனி ஈடு செய்கிறது. இரும்பு சத்து மிகுந்து காணப்படுவதால், கேசப் பராமரிப்பில் சிறந்த ஊக்குவியாகவும், சாயமேற்றும் பொருளாகவும் பயன்தருகிறது.

வற்றலுக்கு நெல்லி முள்ளி என்று பெயர்.

நெல்லிப் பழங்களை விதை நீக்கி இடித்துச் சாறு பிழிந்து சம அளவு சர்க்கரை சேர்த்து மணப்பாகு தயார் செய்து சாப்பிடலாம். அல்லது நெல்லி வற்றலை இடித்துத் தூளாக்கி சம அளவு சர்க்கரை சேர்த்து காலை நேரத்தில் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வெந்நீர் அருந்த கப சம்பந்தமான நோய்களும், பித்த சம்பந்தமான நோய்களும் தீருவதுடன் அதிக உளைச்சலினால் ஏற்படும் கை நடுக்கம் குணமாகிறது. மதுமேக நோயாளிகளுக்கு நெல்லிக்காயுடன் கறி மஞ்சளும், நாவல் கொட்டையும் சம அளவு சேர்த்து வைத்து காலை மாலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வர நோய் விரைவில் கட்டுப்படும்.

நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, கரிச்சத்து, சுண்ணாம்புச் சத்து, தாதுப்பொருள், இரும்பு, நிக்கோடினிக் அமிலம் முதலியவை அடங்கியுள்ளன. இரத்தத்தில் கொலஸ்டிரால் படிதலை வைட்டமின் ‘சி’ தடுக்கிறது. இரத்தத்தில் சேரும் யூரிக் அமிலத்தை நெல்லிக்காய் விலக்குகிறது. பொதுவில் வாதமும் சமப்பட்டு விடுகிறது.

கர்ப்பிணிப் பெண்களும், காய்ச்சல் உள்ளவர்களும் நெல்லிக்காயை உண்ணக் கூடாது என்பார்கள். இது திரிதோஷ சமணி, வாத, பித்த, சிலேத்துமங்களை சமநிலையில் வைக்கக் கூடியது. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என்ற மூன்று சுவைகளும் முத்தோஷங்களை சமனப்படுத்தி, உடலைத் தேற்றுகிறது.

நெல்லிக்காயை எத்தனை நாள் வெயிலில் உலர்த்தினாலும் இதன் குணமும், சுவையும் சற்றும் மாறுவதில்லை. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சமஅளவு சூரணமாகச் செய்து சேர்க்க “திரிபலா” சூரணம் ஆகிறது. நெல்லிப்பழத்தில் முழுமையும் மரம் பயன்பட்டுச் சிறப்படைவது போன்று மனித உடல் முழுவதும் பரவி, ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் நெல்லிக்காய் தருகிறது.

நெல்லிக்காய் சாற்றுடன் சுத்தம் செய்து சுடவைத்த கிளிஞ்சல் சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் சேர்த்துச் சூடுகாட்டி களிம்பு போல் செய்து குதிங்கால் வெடிப்பில் தடவ குணமாகும்.

கடல் அமிர்தம் ஒத்த நெல்லிக்காயைப் பகற்பொழுதில் உண்ண பைத்தியம், கபநோய், பீனிசம், உன்மத்தம், மலபந்தம் நீங்கும். காயின் புளிப்புச் சுவையால் வாயுவும், துவர்ப்பால் கபமும், இனிப்பால் அழகும் உண்டாகும்.

நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக